இதுவரை 379 COVID மரணங்கள் பதிவு

இதுவரை 379 COVID மரணங்கள் பதிவு; முதலாம் திகதி முதல் நாளாந்தம் 6 இலட்சம் பேருக்கு தடுப்பூசி

by Staff Writer 12-02-2021 | 4:01 PM
Colombo (News 1st) நாட்டில் பதிவாகியுள்ள COVID மரணங்களின் எண்ணிக்கை 379 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 4 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. கொழும்பு 05- ஐச் சேர்ந்த 83 வயதான ஒருவர், கொட்டாஞ்சேனையை சேர்ந்த 70 வயதான ஒருவர், கொழும்பு 13-ஐ சேர்ந்த 42 வயதான ஒருவர் மற்றும் உடதலவின்ன பகுதியை சேர்ந்த 64 வயதான ஒருவர் என நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 379 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நேற்று 939 பேருக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதற்கமைய, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 73,116 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 66 ,211 பேர் குணமடைந்துள்ளனர். எவ்வாறாயினும், 6,526 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, மருத்துவ, தாதி மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பல்வேறு துறையினரால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக ஆரம்ப சுகாதார சேவை, தொற்றுநோய் மற்றும் COVID தொற்று கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார். இதற்காக விசேட வைத்திய குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகளில் கடமைகளில் ஈடுபட்டுள்ளோருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை ஏற்றுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார். அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் நாளாந்தம் 06 இலட்சம் பேருக்கு COVID தடுப்பூசியை செலுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கான அடிப்படை வசதிகள் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், நாட்டிற்கு COVID தடுப்பூசி கிடைக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த தொகையில் மாற்றம் ஏற்படலாமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாட்டில் 4000 மத்திய நிலையங்களில் COVID தடுப்பூசிகளை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆரம்ப சுகாதார சேவை, தொற்று நோய் மற்றும் COVID தொற்று கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.