ரவி, அர்ஜுனுக்கு எதிரான வழக்கு ஏப்ரலில் விசாரணை

ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸிற்கு எதிரான வழக்கு ஏப்ரலில் விசாரணை

by Staff Writer 12-02-2021 | 4:42 PM
Colombo (News 1st) முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் அர்ஜுன் அலோசியஸிற்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ஏப்ரல் முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெதிகே முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்றத்தால் கடந்த 05 ஆம் திகதி பிணை வழங்கப்பட்ட குறித்த இரண்டு பிரதிவாதிகளும், பிணை நிபந்தனையை பூர்த்தி செய்வதற்கான இந்த வழக்கு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நிதி அமைச்சராக ரவி கருணாநாயக்க செயற்பட்ட காலப்பகுதியில், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் ஊடாக பெற்றுக்கொண்ட 11.68 மில்லியன் நிதியை பயன்படுத்தி கொள்ளுப்பிட்டி வீடமைப்பு தொகுதியில் சொகுசு வீடொன்றை வாடகைக்கு பெற்றமை, அதற்கு ஒத்தாசை வழங்கியமை உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுகளின் கீழ் பிரதிவாதிகள் இருவருக்கும் எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.