ஏப்ரல் 21 தாக்குதல்: நியாயம் கிடைக்காவிட்டால் சர்வதேசத்தின் ஆதரவை நாடப் போவதாக கொழும்பு பேராயர் தெரிவிப்பு

by Bella Dalima 11-02-2021 | 7:52 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்து கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தார். இதன்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கையில் நீதி கிடைக்காவிட்டால், சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்று நீதியைப் பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக கொழும்பு பேராயர் தெரிவித்தார். எனினும், நாட்டின் தலைவர்கள் அவ்வாறான நிலைக்கு செல்ல இடமளிக்க மாட்டார்கள் என எதிர்பார்ப்பதாகவும் பேராயர் கூறினார். தாக்குதல் தொடர்பான அறிக்கை வௌியானதும் அது தொடர்பில் அரசாங்கம் எவ்வாறு செயற்படுகின்றது என்பதை அவதானித்து தீர்மானங்களை எடுப்பதாகவும் அவர் கூறினார். அரசாங்கம் செயற்படத் தவறும் பட்சத்தில், சர்வதேச அமைப்புகளின் ஆதரவை நாட வேண்டி ஏற்படும் எனவும் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டார்.