உயிரிழந்த 4 மீனவர்களுக்கு நீதி கோரி மனுத்தாக்கல்

இலங்கை கடற்பரப்பில் உயிரிழந்த இந்திய மீனவர்களுக்கு நீதி கோரி இந்திய உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்

by Bella Dalima 11-02-2021 | 2:49 PM
Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பில் உயிரிழந்த இந்திய மீனவர்கள் நான்கு பேருக்கும் நீதி வழங்குமாறு கோரி இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த கடல்சார் மக்கள் நல சங்கம் எனும் அமைப்பினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக த ஹிந்து பரித்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படையை சேர்ந்தவர்களை கைது செய்ய உத்தரவிடுமாறும் தமிழக மீனவர் சங்கத்தின் மனுவில் கோரப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரின் படகில் மோதி விபத்திற்குள்ளான இந்திய மீனவர் படகிலிருந்த நான்கு பேரின் சடலங்கள் கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி மீட்கப்பட்டன. தமிழக மீனவர்களை பாதுகாக்கவும் அவர்களின் உடைமைகளைப் பாதுகாக்கவும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும் உத்தரவிட வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த தமிழக மீனவர்கள் குடும்பத்திற்கு தலா 5 கோடி இந்திய ரூபா இழப்பீடு வழங்கிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. தமிழகத்தின் கோட்டைப்பட்டிணத்திலிருந்து கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் திகதி மீன்பிடிப்பதற்காக புறப்பட்டிருந்த படகு ஒன்றே நெடுந்தீவிற்குகு வடமேற்கே விபத்திற்குள்ளானது. தங்கச்சி மடத்தை சேர்ந்த 30 வயதான ஏ.மெசியா வட்டவாளத்தை சேர்ந்த 52 வயதான வி.நாகராஜ் மண்டபத்தை சேர்ந்த 28 வயதான என்.சாம் மற்றும் உச்சிப்புளியை சேர்ந்த 32 வயதான எஸ்.செந்தில்குமார் ஆகியோர் இதன்போது உயிரிழந்தனர். சடலம் மீதான பிரேதப் பரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், உரிய சட்ட நடவடிக்கைகளுடன் இலங்கை கடற்படையினரால் இந்திய கரையோர காவல் படையினரிடம் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டன.