அரசியல்வாதிகளின் மனைவி பிள்ளைகளை அவதூறு செய்வது கீழ்த்தரமானது: சஷி வீரவன்ச

by Bella Dalima 11-02-2021 | 8:48 PM
Colombo (News 1st) அவதூறு ஏற்படும் வகையில் தகவல்கள் பரப்பப்படுவதாக தெரிவித்து அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார். தாமும் தமது பிள்ளைகளும் அரசியல் நடவடிக்கைகளில் தொடர்புபடுவதில்லை எனவும் சஷி வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சிக்கவும் கண்காணிக்கவும் மக்களுக்கு உரிமை உண்டு. எனினும், அது தொடர்பில் ஆராய்வதற்கு துணிச்சல் இல்லாதவர்கள் மனைவி, பிள்ளைகளை அவதூறு செய்வது கீழ்த்தரமானதும் வெட்கப்பட வேண்டியதுமான செயற்பாடு என சஷி வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறான செயற்பாடுகளால் தமக்கும் தமது பிள்ளைகளுக்கும் உள ரீதியான தாக்கம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.