கொரோனாவினால் உயிரிழப்போரை அடக்கம் செய்ய சந்தர்ப்பம் - பிரதமர் 

by Staff Writer 10-02-2021 | 11:38 AM
Colombo (News 1st) கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சந்தர்ப்பமளிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ​பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே பிரதமர் இதனைக் கூறியுள்ளார். நீரின் ஊடாக கொரோனா வைரஸ் தொற்று பரவாது என நேற்று (09) இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே சபையில் தெரிவித்திருந்த நிலையில், தற்போதாவது அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுமா என பாராளுமன்ற உறுப்பினர் வினவினார். அதற்கு பதிலளித்த பிரதமர் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் H.M.M.ஹரிஸ் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். இதேவேளை, ட்விட்டர் பதிவினூடாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். பிரதமரின் இந்த அறிவிப்பு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்