இலங்கை தீவுகள் வழியாக சீனா தொல்லை கொடுக்கும்

இலங்கைத் தமிழர்களின் கரங்களை வலுப்படுத்தினால் தான் சீனாவின் அச்சுறுத்தலை இந்தியா முறியடிக்க முடியும்: எஸ். ராமதாஸ்

by Staff Writer 10-02-2021 | 3:07 PM
Colombo (News 1st) இலங்கையிடமிருந்து கச்சத்தீவை திரும்பப் பெறுவது மற்றும் இலங்கையில் தமிழர்களின் கரங்களை வலுப்படுத்துவது ஊடாகவே சீனாவின் அச்சுறுத்தலை இந்தியா முறியடிக்க முடியும் என பாட்டாளி மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, இலங்கை சார்ந்த தனது வெளியுறவுக்கொள்கையை இந்தியா மாற்றியமைக்க வேண்டும் என அந்த கட்சியின் நிறுவனர் டெக்டர் எஸ். ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டை அண்மித்த நெடுந்தீவு, அனலைத் தீவு, நயினா தீவு ஆகிய மூன்று தீவுகளை சீனாவின் Sinosar-Etechwin நிறுவனத்திற்கு இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்திலிருந்து நெடுந்தீவு 48 கிலோமீட்டர் தொலைவிலும் இலங்கையிடம் இந்தியா கையளித்த கச்சத்தீவிலிருந்து 23 கிலோமீட்டர் ​தொலைவிலும் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தீவுகளில் கலப்பு மின்திட்டத்தை செயற்படுத்தி, அளவிற்கு அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கோ இலாபம் ஈட்டுவதற்கோ முடியாது என டொக்டர் எஸ்.ராம்தாஸ் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கு எதிரான இராணுவத் தளமாக மாற்றிக்கொள்ளலாம் என்பதற்காகவே சீனா இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நெடுந்தீவில் மின் திட்டங்களை செயல்படுத்தும் போர்வையில் இந்தியாவை 24 மணி நேரமும் சீனாவால் கண்காணிக்க முடியும் எனவும் இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டால் உடனடியாக இந்தியாவைத் தாக்கி நிலைகுலைய வைக்கும் அபாயம் உள்ளதாகவும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் எஸ்.ராம்தாஸ் கூறியுள்ளார். வடக்கில் லடாக் தொடங்கி வடகிழக்கில் சிக்கிம் மாநிலம் வரை இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்து வரும் சீனா, இலங்கை தீவுகள் வழியாக தமிழகத்திலும் தொல்லை கொடுக்கத் தொடங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.