வவுனியா - ஶ்ரீநகர் கிராம மக்கள் 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சத்தியாக்கிரக போராட்டம்

by Staff Writer 09-02-2021 | 6:17 PM
Colombo (News 1st) வவுனியா - பூந்தோட்டம், ஶ்ரீநகர் கிராம மக்கள் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சத்தியாக்கிரக போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். 20 வருடங்களாகியும் காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கப்படாமை, உட்கட்டுமான வசதிகள் இன்மை, மைதானம் இன்மை, வீட்டுத்திட்டம் வழங்காமை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்தே இந்த சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சத்தியாக்கிரக போராட்டம் நடத்தப்பட்ட இடத்திற்கு பிரதேச செயலாளர் ந.கமலதாசன், பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் ஆகியோர் சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுடன் கலந்துரையாடினர். இதனிடயே, கிராமத்தின் பின்புறம் குளத்தின் நீரேந்து பகுதியில் இருக்கும் காணிகளை விடுவிக்க தலைமை அலுவலகமே தீர்மானிக்க வேண்டும் எனவும், கோரிக்கைகளை முன்வைத்தால் அதனை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பதாகவும் போராட்டகாரர்களிடம் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரி ஒருவர் கூறினார். எனினும், உரியவர்கள் உத்தரவாதமளிக்கும் வரை தமது போராட்டத்தை தொடர்வதற்கு மக்கள் தீர்மானித்துள்ளனர்.