by Staff Writer 09-02-2021 | 4:07 PM
Colombo (News 1st) தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்வைத்து பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்பட்ட நீதிக்கான பேரணியில் கலந்துகொண்ட அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலருக்கு எதிராக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறி பேரணி முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்து நீதிமன்றத்தில் B அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பேரணியை நடத்துவதற்கு பொலிஸாரால் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கை மனுவிற்கு அமைய வடக்கு, கிழக்கின் சில பகுதிகளில் பேரணியை நடத்த நீதிமன்றங்கள் தடை விதித்திருந்தன.
பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லை, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லை உள்ளிட்ட பல பகுதிகளுக்குள் பேரணி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் ஏற்கனவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தனிநபர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக B அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்வைத்து 10 அம்சக் கோரிக்கையுடன் கடந்த 3 ஆம் திகதி பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி 7 ஆம் திகதி பொலிகண்டியை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.