வடக்கின் மூன்று தீவுகளில் மின்சாரத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ள சீனா

வடக்கின் மூன்று தீவுகளில் மின்சாரத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ள சீனா

எழுத்தாளர் Bella Dalima

09 Feb, 2021 | 8:24 pm

Colombo (News 1st) எந்தவொரு நாடும் திட்டங்களுக்கான கோரிக்கையை விடுக்க முடியுமான போதிலும், அது தொடர்பில் அரசாங்கம் மாத்திரமே தீர்மானம் எடுக்க முடியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று தெரிவித்தார்.

எனினும், வட மாகாணத்தில் மூன்று தீவுகளில் சீனாவின் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு இலங்கையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ”த ஹிந்து” பத்திரிகை இன்று செய்தி வௌியிட்டுள்ளது.

இந்தியா, ஜப்பான் உடனான கிழக்கு முனைய விவகாரத்திலிருந்து விலக இலங்கை எடுத்த தீர்மானம், புது டெல்லிக்கு இந்த வருடம் ஏற்படும் ஒரேயொரு சவால் அல்லவென இந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு முனையம் தொடர்பில் 2019 ஆம் ஆண்டு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டை மீண்டும் ஆராய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், தமிழக கடற்பரப்பிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலங்கையின் யாழ். குடாநாட்டிற்கு அண்மித்த மூன்று தீவுகளை சீனாவின் மின் உற்பத்தி திட்டத்திற்காக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

இந்த வருடம் ஜனவரி 18 ஆம் திகதி அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதிக்கு ஏற்ப, நயினாத் தீவு, நெடுந்தீவு மற்றும் அனலைத் தீவில் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானத்திற்கு ஏற்ப, சீன நிறுவனத்திற்கு இந்த திட்டத்தை வழங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

இதனிடையே வருடாந்தம் இலங்கையின் நான்கு மில்லியன் கிலோகிராம் தேயிலையை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு புஜியான் சைனா சர்வதேச வர்த்தக நிறுவனமும் தேயிலை சபையும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இந்த உடன்படிக்கை காலம் 15 வருடங்களாகும்.

இலங்கையின் தூய தேயிலையை சீன சந்தை வசம் ஈர்ப்பது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இணக்கப்பாட்டிற்கு அமைய, உத்தேசிக்கப்பட்டுள்ள விலைக்கு இலங்கையின் தேயிலையை கொள்வனவு செய்வதாக சீனா தெரிவித்துள்ளது.

சந்தையின் விலைக்கு ஏற்ப தேயிலை ஏற்றுமதி செய்யப்படும் என இலங்கை தேயிலை சபை தெரிவித்தது.

சீன இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகள் தொடர்பில் இவ்வாறான தகவல்கள் வௌியாகும் போது, சீனாவின் நெருங்கிய தரப்பான பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளத் தயாராகவுள்ளார்.

எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் 24 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்