இந்திய மீனவர்கள் 9 பேரும் விடுதலை

நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்கள் 9 பேரும் விடுதலை

by Staff Writer 08-02-2021 | 7:28 PM
Colombo (News 1st) நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ. ஜீட்சன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சாதாரண சிறைத்தண்டனை விதித்து தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் குறிப்பிட்டுள்ளார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை, இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதற்காக குடிவரவு மற்றும் குடியகழ்வு கட்டுப்பாட்டாளரிடம் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட போது கடந்த டிசம்பர் மாதம் தமிழக மீனவர்கள் 9 பேரும் ஒரு படகுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.