நாளை தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ள பிரதேசங்கள்

நாளை தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ள பிரதேசங்கள்

by Chandrasekaram Chandravadani 07-02-2021 | 7:04 PM
Colombo (News 1st) கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிரதேசங்களில் சில நாளை (08) முதல் விடுவிக்கப்படவுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோத்தமிபுர வீட்டுத்திட்டம், கோத்தமிபுர 24 ஆம் தோட்டம், கோத்தமிபுர 78 ஆம் தோட்டம் மற்றும் வேலுவன வீதி (தெமட்டகொடை) ஆகிய பகுதிகளில் நாளை (08) அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் தளர்த்தப்படவுள்ளது. பூகொடை பொலிஸ் பிரிவின் குமாரிமுல்லை கிராம சேவகர் பிரிவிலும் நாளை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளது. மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்ஒலுவ பிரதேசத்தின் ஜும்மா மஸ்ஜித் மாவத்தை, ஹித்ரா மாவத்தை, புதிய வீதி மற்றும் அக்கரகொடை ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளது. இதனிடையே, அம்பலாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட போலானை தெற்கு பகுதி நாளை (08) அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது.