நாளாந்தம் 80 புற்றுநோயாளர்கள் பதிவாகின்றனர்

நாளாந்தம் 80 புற்றுநோயாளர்கள் பதிவாகின்றனர்

by Staff Writer 07-02-2021 | 2:00 PM
Colombo (News 1st) நாட்டில் நாளாந்தம் பதிவாகும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தச் செல்வதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாளாந்தம் சுமார் 80 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாக தேசிய புற்றுநோய் ஒழிப்புப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. புற்றுநோய் காரணமாக நாட்டில் வருடாந்தம் 15,000 உயிரிழப்புகள் பதிவாகுவதாக தேசிய புற்றுநோய் ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், பொது சுகாதார விசேட வைத்திய நிபுணர் ஜானகி விதானபத்திரண தெரிவித்துள்ளார். புகையிலை, மதுபான பாவனை, முறையற்ற உணவுப் பழக்கவழக்கம் உள்ளிட்ட காரணிகளால் புற்றுநோய் ஏற்படுவதாகவும் வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் வருடாந்தம் பதிவாகும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து செல்கின்றது. கடந்த 5 வருடங்களை பார்த்தோமானால், ஒவ்வொரு வருடமும் சுமார் 30,000 பேர் புதிதாக புற்றுநோயாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். நாளொன்றில் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை பார்த்தோமானால், நாளாந்தம் 80 பேர் வரையில் புற்றுநோயுடன் அடையாளங் காணப்படுகின்றனர். இது மிகவும் பாரிய பிரச்சினையாகும், ஏனைய உலக நாடுகளை போன்று இலங்கையிலும் உயிரிழப்பிற்கான இரண்டாவது முக்கிய காரணியாக புற்றுநோய் அமைந்துள்ளது. அதேபோன்று இலங்கையில் பெண்கள் மத்தியில் அதிகமாக மார்பக புற்றுநோயே காணப்படுகின்றது. பெரும்பாலான ஆண்களுக்கு வாய்ப் புற்றுநோய் ஏற்படுகின்றது. புகையிலை, மதுபானம், வெற்றிலை, பாக்கு பயன்படுத்துதல் ஆகியன வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான பிரதான காரணியாக அமைந்துள்ளது. வருடாந்தம் நாட்டில் 15,000 பேர் புற்றுநோயினால் உயிரிழக்கின்றனர்
என பொது சுகாதார விசேட வைத்திய நிபுணர் ஜானகி விதானபத்திரண தெரிவித்துள்ளார்.