by Staff Writer 06-02-2021 | 2:21 PM
Colombo (News 1st) 2020 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான செயன்முறை பரீட்சைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
செயன்முறை பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளதால், கலைப் பிரிவிற்குரிய பாடங்களுக்கு மாற்று வழியில் புள்ளிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித குறிப்பிட்டார்.
பாடசாலை மட்டத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட மதிப்பீட்டறிக்கைக்குரிய புள்ளிகளை செயன்முறை பரீட்சைக்கான பதிலீட்டு புள்ளி வழங்கும் திட்டமாக முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கல்வி அமைச்சின் செயலாளருடன் கலந்தாலோசித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
அதற்கமைய, மாணவர்களின் தரம் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட மதிப்பீட்டு அறிக்கைக்குரிய புள்ளி விபரங்களை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இதற்கான ஆலோசனைகளை பாடசாலை அதிபர்களுக்கும் வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கும் அனுப்பியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித சுட்டிக்காட்டினார்.