செயற்பாடே முக்கியம், ஊடகக் கண்காட்சியல்ல: தெரணியகலயில் ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 06-02-2021 | 8:53 PM
Colombo (News 1st) மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது அரசியல் நாடகமோ அல்லது ஊடகக் கண்காட்சியோ அல்லவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். மக்களிடம் செல்லாமல் அதிகாரிகள் ஊடாக மாத்திரம் பிரச்சினைகளை அடையாளம் காண்பது தமது முறைமையல்ல எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒன்பதாம் கட்டம் கேகாலை மாவட்டத்தின் தெரணியகல - திக்எல்லகந்த கிராம சேவகர் பிரிவின் திக்எல்லகந்த கனிஷ்ட வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன்னர், வீதியின் மருங்கில் கூடியிருந்த மக்கள் தாம் எதிர்நோக்கும் வைத்தியசாலை பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு முரணாக எவரேனும் செயற்பட்டால், அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். விவசாயிகள் தலைமுறை தலைமுறையாக செய்கை முன்னெடுத்த காணிகளின் உரிமத்தை அவர்களுக்கு வழங்க இதன்போது தீர்மானிக்கப்பட்டது.