by Bella Dalima 05-02-2021 | 2:33 PM
Colombo (News 1st) முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர், இந்த வழக்கு விசாரணை நிறைவு பெறும் வரை வௌிநாடுகளுக்கு செல்வதற்கு தடை விதித்து இரண்டு பிரதிவாதிகளுக்கும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் செல்ல பிரதிவாதிகளுக்கு நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நிதி அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் ஊடாக பெற்றுக்கொண்ட 11.68 மில்லியன் நிதியை பயன்படுத்தி கொள்ளுப்பிட்டி வீடமைப்பு தொகுதியில் சொகுசு வீடொன்றை வாடகைக்கு பெற்றமை, அதற்கு ஒத்தாசை வழங்கியமை உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுகளின் கீழ் பிரதிவாதிகள் இருவருக்கும் எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.