CTB  ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

by Staff Writer 05-02-2021 | 4:39 PM
Colombo (News 1st) இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளன. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். தனியார் பஸ் துறையினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதற்கமைய , இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் நாளாந்த பணிகளுக்கு அவசியமான அனைத்து ஊழியர்களினதும் விடுமுறைகள் எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் தெரிவித்தார். மறு அறிவித்தல் வரை இந்த அறிவித்தல் அமுலில் இருக்கும் எனவும், எதிர்வரும் 8 ஆம் திகதி தொடக்கம் இலங்கை போக்குவரத்து சபையிடம் உள்ள அனைத்து பஸ்களும் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் எனவும் கிங்ஸ்லி ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.