by Staff Writer 04-02-2021 | 7:41 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தல் எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தற்போதைய ஷம்மி சில்வா தலைமையிலான நிர்வாகத்தின் பதவிக் காலம் இம்மாதத்துடன் நிறைவுக்கு வரவுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்படும் இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர், பிரதித்தலைவர்கள் இருவர், செயலாளர், பிரதி செயலாளர், பொருளாளர் மற்றும் பிரதி பொருளாளர் இந்த தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு இடைக்கால நிர்வாகக் குழுவை ஸ்தாபித்து இலங்கை கிரிக்கெட் யாப்பை மறுசீரமைத்து விட்டு, அதன் பின்னர் தேர்தலை நடத்துமாறு முன்னாள் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க அண்மையில் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.