சுதந்திர தின வாழ்த்துச் செய்திகள்

பிரதமர், எதிர்க்கட்சி தலைவரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்திகள்

by Staff Writer 04-02-2021 | 7:59 AM
Colombo (News 1st) 73 ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உலக தலைவர்களும் தமது வாழ்த்து செய்தியினை வௌியிட்டுள்ளனர். நாம் பெற்ற சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளும் செயல்முறையே இன்று தாய்நாட்டிற்கான தேவையாக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். நாடுகளிடையே ஒற்றுமையை வளர்த்தல் மற்றும் மத நல்லிணக்கம் என்பன இதற்கு வலுவான ஆதரவாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் உள்ளூர் உற்பத்திக்கு மதிப்பளிக்கும் பொருளாதார கொள்கை ஊடாக அபிவிருத்தியை நோக்கி நகரும் பாதையில் நுழைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஒவ்வொரு துறையிலும் முன்னெடுக்கப்பட வேண்டிய சீர்திருத்தங்களைப் புரிந்துகொண்டு, மக்களிடம் முன்வைக்கப்பட்ட சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் ஊடாக சுதந்திரம் மேலும் அர்த்தமுள்ளதாகும் போது வளமான எதிர்காலம் - சுபீட்சமான தாய்நாடு என்பது யதார்த்தமாகும். எதிரிப் படைகளைத் தோற்கடிப்பது போன்றே, COVID - 19 தொற்றை தோற்கடிப்பதற்கும் இலங்கை தேசமாக எழுந்து நிற்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தமது சுதந்திர தின செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தாய்நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த மற்றும் மகத்தான தியாகங்களைச் செய்த அனைவருக்கும் மற்றும் அந்த சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைவருக்கும் மரியாதை செலுத்துவதாகவும் பிரதமர் கூறியுள்ளார். ஒற்றுமையுடன் ஒன்றாக முன்னேறுவதன் மதிப்பு, வரலாற்றின் மிக முக்கியமாக செய்தியாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டின் இறையாண்மையை உறுதி செய்வதும் உள்ளூர் வளங்களை பாதுகாப்பதும் எமக்கு முன் உள்ள சவால் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமது வாழ்த்து செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். மொழி, மதம் மற்றும் கலாசாரம் ஆகிய பகிரப்பட்ட பாரம்பரியங்களின் அடிப்படையிலான பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உறவுகள் தொடர்பில், பிரதமர் மோடி தமது வாழ்த்து செய்தியில் நினைவு கூர்ந்துள்ளார். எதிர்வரும் ஆண்டுகளிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடைந்து, மக்களின் செழுமை மற்றும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும் என இந்திய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.