பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி இன்று ஆரம்பம்

by Staff Writer 03-02-2021 | 1:14 PM
Colombo (News 1st) பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி இன்று (03) காலை அம்பாறை - பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகள், பொது அமைப்புகள், தமிழ் தேசிய கட்சிகளின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் இந்த தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நில அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடுதலை, பெருந்தோட்ட மக்களின் 1,000 ரூபா சம்பளப் பிரச்சனை, ஜனாஸா தகனம் உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி அவற்றை கண்டித்தும் நீதி கோரியும் தீர்வு கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தப் போராட்டத்திற்கு அனுமதி வழங்கமுடியாது என சில பகுதிகளில் பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியிருந்தாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் கூறினர். எவ்வாறாயினும், போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.