தமிழக மீனவர்கள் கொலையை ஏற்றுக்கொள்ள முடியாது 

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்: சுப்பிரமணியம் ஜெய்சங்கர்

by Staff Writer 03-02-2021 | 5:02 PM
Colombo (News 1st) வடக்கு கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் நான்கு பேர் இலங்கை கடற்படையினரால் அண்மையில் கொல்லப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கிய போதே கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து இலங்கை அரசிடம் மத்திய அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக மீனவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டு, இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளார்கள் என இதன்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் திருச்சி சிவா கூறியுள்ளார். இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனவும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தவிர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருச்சி சிவா மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படை விவகாரம் நீண்டகாலமாக இருந்து வருவதாக இதன்போது இந்திய மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார். இவர்களின் கருத்துக்களுக்கு பதில் வழங்கிய இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டமை தொடர்பில் இந்தியா கடும் கண்டணத்தை பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.