ஆங் சான் சூ கீ  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

ஆங் சான் சூ கீ 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

by Bella Dalima 03-02-2021 | 6:33 PM
Colombo (News 1st) மியன்மாரின் நிர்வாகத்தலைவர் ஆங் சான் சூ கீ எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை (01) மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சியின் போது தடுத்து வைக்கப்பட்ட அவருக்கு எதிராக, மியன்மார் பொலிஸாரினால் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஏற்றுமதி இறக்குமதி சட்டங்களை மீறியமை, சட்டத்திற்கு முரணான தொடர்பாடல் சாதனங்களை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அவற்றில் அடங்குகின்றன. எவ்வாறாயினும், ஆங் சான் சூ கீ தற்போது எங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியாதுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மியன்மார் தலைநகர் நே பி டாவிலுள்ள (Nay Pyi Taw) அவரது இல்லத்திலேயே ஆங் சான் சூ கீ வீட்டுக்காவலில் வைத்திருக்கப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது. இதேவேளை, பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஜனாதிபதி Win Myint-க்கு எதிராகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. COVID தொற்றுக்காலத்தில் ஒன்று கூட விதிக்கப்பட்ட தடைகளை மீறியதாக அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மியன்மார் பொலிஸாரின் குற்றச்சாட்டு பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவரும் இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.