மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் ரம்பகென் ஓயா காணியை சோளச் செய்கைக்கு வழங்க அமைச்சரவை அனுமதி

by Staff Writer 02-02-2021 | 8:42 PM
Colombo (News 1st) தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த ரம்பகென் ஓயா வலயத்திலுள்ள 2750 ஏக்கர் காணியை சோளச் செய்கைக்காக வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மகாவலி அதிகார சபையின் கீழ் உள்ள சரணாலயங்களுடன் தொடர்புபடாத காணிகள் இத்தகைய முதலீடுகளுக்கு வழங்கப்படுவதாக அமைச்சரவை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் ஒரு வருட குத்தகைக்கு வழங்கி, அதன் முன்னேற்றத்திற்கு அமைய நீண்டகால குத்தகை அடிப்படையில் காணிகளை வழங்குவதற்கு நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் அம்பாறை மாவட்டத்தின் மஹஓயா பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பொல்லெபெத்த கிராமத்தின் ரம்பகென் ஓயா தெற்கு கரையில் உள்ள நீரேந்து பகுதியை சுத்திகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், மக்கள் அதற்கு கடும் எதிர்ப்பை வௌிப்படுத்தியிருந்தனர். பொல்லெபெத்த பகுதியில் வாழும் ஆதிவாசி மக்களும் இந்த நடவடிக்கைக்கு தமது எதிர்ப்பினை வௌியிட்டு வருகின்றனர்.