நுண் நிதி இலகு கடன் தொடர்ந்தும் வழங்கப்படவுள்ளது

நுண் நிதி இலகு கடன் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது

by Staff Writer 02-02-2021 | 3:04 PM
Colombo (News 1st) வட மாகாணம் மற்றும் வட மத்திய மாகாண மக்களுக்கான நுண் நிதி இலகு கடன் வழங்கும் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கடன் பிடியில் சிக்கியுள்ள குறைந்த வருமானம் பெறுவோருக்காக கூட்டுறவு கிராமிய வங்கி மற்றும் சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குறைந்த வட்டி வீதத்துடன் கூடிய இலகு கடன் வழங்கல் திட்டம், வட மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணங்களின் 6 மாவட்ட செயலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. வட மாகாணத்திற்காக 292 மில்லியன் ரூபாவும் வட மத்திய மாகாணத்திற்காக 250 மில்லியன் ரூபாவும் குறித்த கடனுதவி திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, சுழற்சி முறை நிதியாகவும் பயன்படுகின்றது. கடன் பிடியில் சிக்குண்டுள்ள மக்களுக்கு சலுகை வழங்குவதற்காக குறித்த சுழற்சி முறை நிதியைப் பயன்படுத்தி கடனுதவி திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் அதன் கீழ் வழங்கப்பட்டு வரும் அதிகபட்ச கடன் தொகையை ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கும் அதற்கான வருடாந்த வட்டி வீதத்தை 9 வீதத்திலிருந்து 6 வீதம் வரை குறைப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.