மேல் மாகாண பாடசாலைகள் 15ஆம் திகதி திறக்கப்படுமா?

மேல் மாகாண பாடசாலைகள் 15ஆம் திகதி மீள திறக்கப்படுமா? 

by Staff Writer 01-02-2021 | 6:58 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை சுகாதார அதிகாரிகளின் அனுமதியின் கீழ் எதிர்வரும் 15 ஆம் திகதி மீள திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்ட அவர் இதனைக் கூறியுள்ளார். மேல் மாகாண பாடசாலைகளில் சாதாரண தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மாத்திரம் இடம்பெற்று வருகின்றன. மாகாண பாடசாலைகளில் ஏனைய வகுப்புகளையும் ஆரம்பிப்பது தொடர்பில் களுத்துறை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட இணைப்புக்குழு கூடி கலந்துரையாடியுள்ளது. பெரும்பாலான பாடசாலைகளை மீள திறப்பதற்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக இதன்போது கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.