மாணவர்களை உள்ளீர்க்கும் செயற்பாடு ஒத்திவைப்பு

பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்க்கும் செயற்பாடு ஒத்திவைப்பு 

by Staff Writer 01-02-2021 | 3:23 PM
Colombo (News 1st) 2020 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்க்கும் நடவடிக்கையை ஒரு மாதத்திற்கு ஒத்திவைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனைக்கமைய இந்த தீர்மானத்தை எடுத்ததாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் மீண்டும் விசாரணைகளை மேற்கொண்டு உசிதமான நடவடிக்கைகளை எடுப்பதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இன்று (01) மதியம் ஜனாதிபதி செயலகம் வரை பேரணியாக சென்று பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகளை குறைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதன்போது தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் தாம் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடியதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.