துறைமுகம் தொடர்பிலான நிலைப்பாட்டை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்: ஞானசார தேரர்

by Staff Writer 30-01-2021 | 5:28 PM
Colombo (News 1st) துறைமுகம் தொடர்பிலான நிலைப்பாட்டை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டுமே தவிர, ஒரு சில அமைச்சர்கள் வௌியிடும் கருத்துக்களை செவிமடுப்பது தேவையற்றது என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். அஜித் நிவாட் கப்ரால், தயா ரத்நாயக்க ஆகியோர் இந்த விடயத்தில் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருவதாக தேரர் சுட்டிக்காட்டினார். துறைமுக விடயத்திலுள்ள நியாயத்தை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் தேரர் வலியுறுத்தினார். கிழக்கு முனையத்தை வழங்கினாலும் மேற்கு முனையத்தை வழங்கினாலும் இவையனைத்தும் இலங்கைக்கு உரியது என கலகொட அத்தே ஞானசார தேரர் சுட்டிக்காட்டினார். மஹிந்த ராஜபக்ஸவோ, கோட்டாபய ராஜபக்ஸவோ, ரணில் விக்ரமசிங்கவோ யார் வழங்கினாலும் அதில் வேறுபாடு இல்லை எனவும் தேரர் தெரிவித்தார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே கலகொட அத்தே ஞானசார தேரர் இதனைக் கூறினார்.