கிழக்கு முனையத்திற்கு பதிலாக மேற்கு முனையத்தை வழங்க முயற்சி: மகா சங்கத்தினர் அதிருப்தி

by Staff Writer 30-01-2021 | 8:43 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்திற்கு பதிலாக மேற்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்கும் முயற்சி தொடர்பில் மகா சங்கத்தினர் தமது எதிர்ப்பை வௌியிட்டுள்ளனர். இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர் இது தொடர்பில் கருத்து வௌியிட்டார். இதன்போது, தங்கையைக் காண்பித்து அக்காவை திருமணம் செய்து வைக்கும் பாணியில் அரசாங்கம் செயற்படுவதாக சிங்ஹலே அமைப்பின் செயலாளர் மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர் குறிப்பிட்டார். தேசிய சக்திகள், தொழிற்சங்கங்கள் மற்றும் தேசப்பற்றாளர்களின் ஆர்ப்பாட்டங்கள், அழுத்தங்கள் காரணமாக அரசாங்கம் பின்வாங்கி, கிழக்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்காமல், மேற்கு முனையத்தை அவர்களுக்கு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தேரர் கூறினார்.