கொழும்பில் வீதிகள் பல மூடப்பட்டுள்ளன

சுதந்திர தின ஒத்திகை காரணமாக கொழும்பில் வீதிகள் பல மூடப்பட்டுள்ளன

by Staff Writer 30-01-2021 | 3:14 PM
Colombo (News 1st) 73 ஆவது சுதந்திர தினத்திற்கான ஒத்திகை நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின. ஒத்திகை நடவடிக்கைகள் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 3 ஆம் திகதி காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பல வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். எதிர்வரும் 4 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுலில் இருக்கும் என அவர் கூறியுள்ளார். இதற்கிணங்க, சுதந்திர சதுக்கத்தை அண்மித்த வீதிகள் முழுமையாக மூடப்படுவதுடன், மேலும் சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. குறித்த காலப்பகுதியில் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக மாற்று வீதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். இதற்கமைய, காலி வீதியில் கொள்ளுப்பிட்டி சந்தியூடாக வருகைதரும் வாகனங்கள், லிபர்ட்டி சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, பித்தளை சந்தி, செஞ்சிலுவை சங்க சுற்றுவட்டம், லிப்டன் சுற்றுவட்டத்தின் ஊடாக யூனியன் பிளேஸ், வோட் பிளேஸ் மற்றும் டீன்ஸ் வீதிக்குள் உட்பிரவேசிக்க முடியும். ஹெவ்லோக் வீதி - தும்முல்ல வீதியூடாக வருகை தரும் வாகனங்கள், தர்ஸ்டன் வீதி, அர்னஸ்ட் டி சில்வா மாவத்தை, பித்தளை சந்தியூடாக ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை மற்றும் தர்மபால மாவத்தைக்குள் உட்பிரவேசிக்க முடியுமென பொலிஸார் அறிவித்துள்ளனர். அதேபோன்று, ஹோர்ட்டன் பிளேஸ் ஊடாக வருகை தரும் வாகனங்கள் ஹோர்ட்டன் பிளேஸ் விஜேராம சந்தியில் வலப்பக்கமாக திரும்பி வோர்ட் பிளேஸ், சொய்ஸா சுற்றுவட்டம் ஊடாக தர்மபால மாவத்தை, யூனியன் பிளேஸ் மற்றும் டீன்ஸ் வீதிக்குள் பிரவேசிக்க முடியும் என்பதுடன், தும்முல்ல செல்லும் வாகனங்கள் பௌத்தாலோக்க மாவத்தை வீதியை பயன்படுத்த முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ள அல்லது வீதி மூடப்பட்டுள்ள பகுதிகளை தவிர்த்து கீழ் குறிப்பிடப்படும் பகுதிகளினூடாக கொழும்பிலிருந்து வௌியேற முடியுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். தர்மபால மாவத்தை, யூனியன் பிளேஸ் அல்லது டீன்ஸ் வீதி ஊடாக சொய்ஸா சுற்றுவட்டம் நோக்கி பயணிக்கும் வாகனங்கள் பொரளைக்கு செல்வதற்காக வோர்ட் பிளேஸ் பகுதியை பயன்படுத்த முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மூடப்பட்டுள்ள அல்லது போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ள வீதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், தாம் வசிக்கும் வீதிகளுக்குள் உட்பிரவேசிக்க பேரணிகள், வாகன தொடரணி அல்லது விசேட போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாத காலப்பகுதியில் அனுமதியளிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ள மற்றும் வீதி மூடப்பட்டுள்ள பகுதிகளினூடாக பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள், மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.