விசேட ரோந்துப் படகு மூலம் இந்திய மீனவர்களின் அத்துமீறல் கண்காணிக்கப்படவுள்ளது

by Staff Writer 29-01-2021 | 8:36 PM
Colombo (News 1st) இந்திய - இலங்கை மீனவர்கள் இடையிலான பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மீன்வளத்துறைக்கு இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்காணிக்கும் வகையிலான அதிவேக கண்ணாடி நாரிழை ரோந்துப் படகு வழங்கப்பட்டுள்ளது. கஜா புயல் மறுசீரமைப்பு மறுவாழ்வு மற்றும் புனரமைப்புத் திட்டத்தின் நிதி உதவியுடன் இராமேஸ்வரம் மீன்வளத்துறைக்கு அதிவேக கண்ணாடி நாரிழை படகு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படகு மூலம் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தும் படகுகளை கண்காணிக்க அதிவேக குதிரைத்திறன் கொண்ட 2 என்ஜின்கள் அதில் பொருத்தப்பட்டுள்ளதுடன், ஆராய்ச்சி விளக்குகள், GPS கருவி என்பனவும் பொருத்தப்பட்டுள்ளன. இதேவேளை, தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை தயாரித்துக் கொடுப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்பிடி வலை பின்னும் தொழிலாளர்களுக்கு இராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் குருசாமி இராஜேந்திரன் அறிவித்துள்ளார். இந்திய மீனவர்கள், தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலை மற்றும் சுருக்குமடி பாபின்ஸ் போன்றவைகளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடல்வளம் அழிவதுடன், இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையே பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்சினையை தடுக்கும் பொருட்டு, நேற்று (28) மாலை மீன்வளத்துறை அலுவலகத்தில், வலை பின்னுபவர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் மீன்வளத்துறை உதவி இயக்குனர் கலந்துரையாடினார். இதன்போது, தடைசெய்யப்பட்ட வலைகளை குறிப்பாக இரட்டை மடி வலைகளை தயார் செய்யவோ அல்லது பழுதுபார்க்கவோ கூடாது என மீன்வளத்துறை உதவி இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எச்சரிக்கையை மீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோர் மீது பொலிஸாரினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.