கவனயீர்ப்பில் ஈடுபட்டு கைதான 8 பேருக்கு பிணை

மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரம்: கவனயீர்ப்பில் ஈடுபட்டு கைதான 8 பேர் பிணையில் விடுவிப்பு

by Bella Dalima 29-01-2021 | 3:52 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பகுதியை உடனடியாக பெற்றுத்தருமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பில் ஈடுபட்ட 08 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் A.L.முனாஸ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பிரதிவாதிகள் 8 பேரையும் பதில் நீதவான் பிணையில் விடுவித்தார். கடந்த 15 ஆம் திகதி பட்டிப்பொங்கலன்று கவனயீர்ப்பில் ஈடுபட்ட 19 பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இன்றைய தினம் நகர்த்தல் பத்திரம் மூலம் பண்ணையாளர்கள் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர். இந்நிலையில், இன்று 08 பேரினுடைய முழுமையான பெயர்கள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அவர்கள் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பொது விதிகள் சட்டத்தின் கீழ், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இவர்கள் மீது ஏறாவூர் பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.