ஈழ இலக்கியத்தின் தவிர்க்க முடியாத ஆளுமை டொமினிக் ஜீவா இயற்கை எய்தினார்

by Staff Writer 29-01-2021 | 5:01 PM
Colombo (News 1st) இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர் டொமினிக் ஜீவா தனது 94 ஆவது வயதில் இயற்கை எய்தினார். எண்ணற்ற தமிழ் நூல்களை சமூகத்திற்கு படைத்த டொமினிக் ஜீவா, முதுமை மற்றும் உடல்நலக்குறைவால் நேற்று (28) கொழும்பில் காலமானார். 1940 ஆம் ஆண்டளவில் எழுத்துத் துறையில் கால் பதித்த அன்னார், ஈழ இலக்கியத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாவார். 1966 ஆம் ஆண்டு மல்லிகை சஞ்சிகையை ஆரம்பித்த டொமினிக் ஜீவா, நவீன தமிழ் இலக்கிய இதழாக வெற்றிகரமாக அந்த இதழை நடத்திச்சென்றார். இவரது 'எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்' ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூலாகும். பாதுகை, வாழ்வின் தரிசனங்கள், அனுபவ முத்திரைகள் உள்ளிட்ட எண்ணற்ற தமிழ் நூல்களை இந்த சமூகத்திற்கு படைத்து தந்தவர் டொமினிக் ஜீவா. அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.