உலர் மஞ்சள், களை நாசினியுடன் மூவர் கைது

1340 கிலோகிராம் உலர் மஞ்சள், 80 கிலோகிராம் கிளைபோசெட் களை நாசினியுடன் கற்பிட்டியில் மூவர் கைது

by Staff Writer 26-01-2021 | 7:33 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட உலர் மஞ்சள் மற்றும் கிளைபோசெட் (Glyphosate) களை நாசினியுடன் புத்தளம் கற்பிட்டி பகுதியில் வைத்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனையிடப்பட்டுள்ளது. இதன்போது, 1340 கிலோகிராம் உலர் மஞ்சளும் 80 கிலோகிராம் கிளைபோசெட் களை நாசினியும் கைப்பற்றப்பட்டுள்ளன. 37 சாக்குகளில் உலர் மஞ்சளும் தலா 100 கிராம் நிறையுடைய 800 பக்கெட்களில் கிளைபோசெட்டும் பொதியிடப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பகுதியை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக அப்பகுதிக்கு சென்றிருந்த லொறியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.