by Bella Dalima 26-01-2021 | 3:44 PM
Colombo (News 1st) டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லி எல்லையில் விவசாயிகள் உழவு இயந்திரத்தில் பேரணி நடத்தி வருகின்றனர்.
இதன்போது, திடீரென விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்துள்ளனர். பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசி போராட்டத்தை கலைக்க முற்பட்டுள்ளனர்.
எனினும், டெல்லிக்குள் நுழைந்து செங்கோட்டையை அவர்கள் முற்றுகையிட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
செங்கோட்டையில் ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
இதனிடையே, சட்டத்தை யாரும் கையில் எடுக்க வேண்டாம் என விவசாயிகளுக்கு டெல்லி பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை, டெல்லியின் பல பகுதிகளில் இணையத்தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தின் போது உழவு இயந்திரம் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்ததாகவும், அவர் துப்பாக்கிச்சூட்டில்தான் பலியானார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உழவு இயந்திரத்தைக் கொண்டு தடுப்புகளை அகற்ற முயன்ற போது, உழவு இயந்திரம் கவிழ்ந்து தான் அவர் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் இன்று கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல், வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டங்கள், உழவு இயந்திர பேரணி ஆகிய பெரும் சவால்களுக்கு மத்தியில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.