இன்று 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இன்று 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 709 பேர் குணமடைந்தனர்

by Staff Writer 26-01-2021 | 8:12 PM
Colombo (News 1st) இலங்கையில் இன்று 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, இலங்கையில் பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 59,535 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இன்று 709 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 51,046 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் நேற்று (25) உறுதிப்படுத்தப்பட்டன. பேருவளையை சேர்ந்த 49 வயதான பெண், தேசிய தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்ததுடன், மரணத்திற்கான காரணம் COVID நிமோனியாவுடன் குருதி விஷமடைந்தமை மற்றும் புற்றுநோய் உக்கிரமடைந்தமை என தெரியவந்துள்ளது. தெரணியகல பகுதியை சேர்ந்த 43 வயதான பெண், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (24) உயிரிழந்துள்ளார். வறக்காகொட பகுதியை சேர்ந்த 76 வயதான ஒருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் நேற்று முன்தினம் உயிழந்ததுடன், குருதி விஷமடைந்தமை, அவயவங்கள் செயலிழந்தமை, COVID நிமோனியா என்பன அவரது மரணத்திற்கான காரணமாகும். ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு 8-ஐ சேர்ந்த 71 வயதான ஒருவரும் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இதற்கமைய, இலங்கையில் பதிவான COVID மரணங்களின் எண்ணிக்கை 287 ஆக அதிகரித்துள்ளது. இந்த மாதத்தில் அதிகப்படியாக கொழும்பு மாவட்டத்தில் 21,692 பேருக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தவிர, கம்பஹாவில் 11,865 நோயாளர்களும் களுத்துறையில் 4236 நோயாளர்களும் கண்டியில் 2854 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனிடையே, கடந்த வாரத்தில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 8 COVID மரணங்கள் பதிவானதுடன், 1612 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டனர். நேற்று பதிவான 737 கொரோனா நோயாளர்களில் 227 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டிருந்தனர். களுத்துறையில் 102 நோயாளர்களும் கம்பஹாவில் 96 நோயாளர்களும் பதிவாகியிருந்தனர்.