Oxford-AstraZeneca கொண்டுவரப்படவுள்ளது; Pfizer தடுப்பூசியை பெறுவதற்கான பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது

by Staff Writer 24-01-2021 | 7:30 PM
Colombo (News 1st) இந்தியாவில் தயாரிக்கப்படும் Oxford-AstraZeneca தடுப்பூசி எதிர்வரும் புதன்கிழமை (27) நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர், உடனடியாக அதனை வழங்குவதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. அடுத்த வாரத்திற்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஆரம்ப வைத்திய சேவை , தொற்று நோய் மற்றும் COVID தொற்றைக் கட்டுபடுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். தொற்றுக்குள்ளானோர் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் சுகாதார ஊழியர்களுக்கும் முப்படையினர் உள்ளிட்ட தரப்பினருக்கும் கொரோனா தடுப்பூசி முதலில் வழங்கப்படவுள்ளது. பொதுமக்களுக்கும் தடுப்பூசியை விரைவில் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் அவசரத் தேவைக்காக, Oxford-AstraZeneca தடுப்பூசியை பயன்படுத்த தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், ரஷ்யாவில் தயாரிக்கப்படும் Sputnik V தடுப்பூசிக்கும் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. ரஷ்ய தடுப்பூசி தொடர்பில், அரசாங்கம் சார்பில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனமே மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. ரஷ்யாவின் Sputnik V தடுப்பூசியை நாட்டின் அவசர தேவைக்கு பயன்படுத்துவதற்கு தேவையான விண்ணப்பங்கள் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையிடம் கடந்த 8 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது. இதனடிப்படையில், ரஷ்யாவின் தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனம், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை ஆகியன நாளை (25) இணைய வழியாக கலந்துரையாடவுள்ளன. இதேவேளை, Sinopharm தடுப்பூசியையும் பெற்றுக்கொள்வது தொடர்பில் சீனாவுடன் கலந்துரையாடி வருவதாக ஔடத உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசி நன்கொடையாகக் கிடைக்கும் என அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார். ரஷ்யாவின் Sputnik V தடுப்பூசி தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் நிறைவுபெற்றுள்ளதாகவும் Pfizer and BioNTech தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.