வெள்ளை மாளிகைக்கு நாசா வழங்கிய பரிசு 

நிலவிலிருந்து எடுத்துவரப்பட்ட பாறைத் துண்டை வெள்ளை மாளிகைக்கு வழங்கியது நாசா

by Bella Dalima 23-01-2021 | 6:25 PM
Colombo (News 1st) நிலவிலிருந்து எடுத்துவரப்பட்ட ஒரு சிறிய பாறைத் துண்டை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் காட்சிக்கு வைக்க நாசா அனுமதி அளித்துள்ளது. ஜோ பைடன் நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று, 3.9 பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைத் துண்டு ஓவல் அலுவலகத்தில் வைக்கப்படவுள்ளது. அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளை ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், 1972 ஆம் ஆண்டில் நிலவிலிருந்து எடுத்துவரப்பட்ட 332 கிராம் எடையுள்ள சிறிய பாறைத் துண்டை ஓவல் அலுவலகத்தில் காட்சிக்கு வைக்க நாசா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சிறிய துண்டு, நிலவின் அருகாமையில் கடைசியாக இடம்பெற்ற பெரிய தாக்க நிகழ்வின் போது உருவாக்கப்பட்டது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நிலவில் காலடி வைத்த கடைசி மனிதர்களான Apollo 17 விண்வெளி வீரர்கள், இந்த மாதிரியை நிலவின் டாரஸ்-லிட்ரோ பள்ளத்தாக்கின் ஒரு பெரிய கற்பாறையிலிருந்து எடுத்துக்கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழங்காலத்து மக்களின் இலட்சியங்களையும் சாதனைகளையும் அடையாளமாக அங்கீகரிக்கும் விதமாக நிலவின் பாறைத் துண்டு தற்போது ஓவல் அலுவலகத்தில் வைக்கப்படவுள்ளது.