சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாநிதி எட்வின் ஆரியதாச காலமானார்

by Staff Writer 22-01-2021 | 8:48 PM
Colombo (News 1st) சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாகீர்த்தி, கலாநிதி எட்வின் ஆரியதாச தனது 98 ஆவது வயதில் இன்று காலமானார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த கலாநிதி எட்வின் ஆரியதாச இன்று பிற்பகல் நாரஹேன்பிட்டியில் உள்ள அன்னாரின் வீட்டில் காலமானார். 1922 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி காலி உணவட்டுன பிரதேசத்தில் பிறந்த இவர், 1949 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் திகதி லேக் ஹவுஸ் நிறுவனத்தில் பத்திரிகையாளராக இணைந்து கொண்டார். பல்கலைக்கழகங்களில் வெகுஜன தொடர்பாடல் பிரிவை அறிமுகம் செய்வதற்கு கலாநிதி எட்வின் ஆரியதாச முன்நின்று செயற்பட்டார். அத்துடன், அவர் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் மேற்கொண்ட புரட்சிகரமான மாற்றங்கள் இலங்கையின் வெகுஜன தொடர்பாடல் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்தன. சிரச ஊடக வலையமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து ஆலோசகராகவும் வளவாளராகவும் செயற்பட்ட கலாநிதி எட்வின் ஆரியதாச, சவாலான காலப்பகுதிகளில் நியூஸ்ஃபெஸ்ட்டுடன் பலமாக கைகோர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.