தப்பிச்சென்ற கொரோனா நோயாளி கண்டுபிடிப்பு

கட்டுநாயக்கவில் தப்பிச்சென்ற கொரோனா நோயாளி கண்டுபிடிப்பு

by Staff Writer 22-01-2021 | 2:44 PM
Colombo (News 1st) கட்டுநாயக்க பகுதியில் தப்பிச்சென்ற கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இவரை நீர்கொழும்பு வைத்தியசாலையின் கொரோனா தடுப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் , சட்டத்தரணி அஜித் ரோஹன குறிப்பிட்டார். பதவிய பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவரே கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், தப்பிச் சென்றிருந்ததாக அவர் கூறினார். இந்த நோயாளியை சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்கான தயார்ப்படுத்தல்களில் ஈடுபட்டிருந்த போது, அவர் தப்பிச் சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய இளைஞர் ஒருவருக்கே COVID தொற்று உறுதி செய்யகப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை 56,076 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து நேற்று 769 பேர் குணமடைந்ததுடன், COVID தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 47,984 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கடந்த 02 வாரங்களில் அடையாளங்காணப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸின் மாதிரிகள் தொடர்பான பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது. ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தினால் இந்த பரிசோதனை நடத்தப்படவுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 276 ஆக அதிகரித்துள்ளது.