நேற்றைய தினம் வடக்கு, கிழக்கில் 71 பேருக்கு தொற்று

24 மணி நேரத்தில் வடக்கு, கிழக்கில் 71 பேருக்கு தொற்று உறுதி

by Chandrasekaram Chandravadani 21-01-2021 | 9:59 AM
Colombo (News 1st) நேற்று (20) முதல் இன்று (21) காலை வரையான காலப் பகுதிக்குள் இலங்கையில் புதிதாக 770 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COIVD – 19 தொற்றை கட்டுப்படுத்தும் செயலணி சுட்டிக்காட்டியுள்ளது. அவர்களில் இருவர் வௌிநாடுகளிலிருந்து நாட்டை வந்தடைந்தவர்களாவர். எஞ்சிய 768 பேருள் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 270 பேர், கம்பஹா மாவட்டத்தில் 80 பேர், அம்பாறை மாவட்டத்தில் 05 நபர்கள், வவுனியா மாவட்டத்தில் 26 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 09 பேர், மன்னார் மாவட்டத்தில் 36 பேர், மொனராகலை மாவட்டத்தில் ஐவர், கேகாலை மாவட்டத்தில் 09 நபர்கள், மாத்தளை மாவட்டத்தில் 40 பேர், திருகோணமலை மாவட்டத்தில் நால்வர், புத்தளம் மாவட்டத்தில் 13 பேர் மற்றும் பதுளை மாவட்டத்தில் நால்வர் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு - கோட்டை பகுதியில் நால்வர், கொம்பனித்தெரு பிரதேசத்தில் 11 பேர், கொள்ளுப்பிட்டி பகுதியில் 13 பேர், பம்பலப்பிட்டி பிரதேசத்தில் 06 பேர், நாரஹேன்பிட்ட பகுதியில் 46 நபர்கள், ​வெள்ளவத்தை பகுதியில் 23 பேர், பொரளை பிரதேசத்தில் 18 நபர்கள், மருதானை பிரதேசத்தில் 11 பேர், கொட்டாஞ்சேனை பகுதியில் 17 நபர்கள், கிரேண்ட்பாஸ் பகுதியில் 11 பேர், மட்டக்குளி பகுதியில் 19 நபர்கள் அடங்கலாக கொழும்பு மாவட்டத்தில் 270 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பில் 07 பேருக்கும் வத்தளை பகுதியில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்பாறை பகுதியில் இருவரும் காத்தான்குடி பகுதியில் ஒருவரும் ஆலையடிவேம்பு பகுதியில் இருவரும் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர். மன்னார் பிரதேசத்தில் 12 பேர், எருக்கலம்பிட்டி பகுதியில் 12 பேர், கீரி பகுதியில் ஒருவர், தாராபுரம் பிரதேசத்தில் நால்வர், பேசாலை பகுதியில் மூவர் உள்ளடங்கலாக மன்னார் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர். வவுனியா பிரதேசத்தில் 21 பேரும் தோணிக்கல் பகுதியில் ஐவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். திருகோணமலை பிரதேசத்தில் இருவரும் ஏறாவூர் பிரதேசத்தில் ஒருவரும் பதவிஶ்ரீபுர பகுதியில் ஒருவர் அடங்கலாக திருகோணமலை மாவட்டத்தில் நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய 4 மாவட்டங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றாளர்கள் எவரும் பதிவாகவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இன்று (21) காலை வரையில் நாட்டில் மொத்தமாக 55,189 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதேநேரம், 47,215 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்றைய தினம் (20) கொரோனா தொற்று காரணமாக மல்லவகெதர பகுதியை சேர்ந்த ஒருவரது மரணம் உறுதி செய்யப்பட்டது. அந்த வகையில், நாட்டில் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது. முப்படையினரால் முன்னெடுத்து வரப்படுகின்ற 96 கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களில், இன்றளவில் (21) 7,842 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம், நேற்றைய தினத்தில் மாத்திரம் 18,072 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்தநிலையில், கட்டார், சவுதி அரேபியா மற்றும் கொரியா ஆகிய நாடுகளில் இருந்து 106 பேர் இன்று (21) தாயகம் திரும்பியுள்ளனர்.