தொன்மை வாய்ந்த தங்க புத்தர் சிலையை விற்பனைக்காக கொண்டு சென்ற மூவர் முல்லைத்தீவில் கைது

by Bella Dalima 21-01-2021 | 3:34 PM
Colombo (News 1st) தொன்மை வாய்ந்த தங்கத்தினாலான புத்தர் சிலையொன்றை விற்பனைக்காக கொண்டு சென்ற மூவர் முல்லைத்தீவில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப் படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, முல்லைத்தீவு - செல்வபுரம் இராணுவ சோதனை சாவடிக்கு அருகே வேன் ஒன்று சோதனைக்குட்படுத்தப்பட்டபோதே இந்த சிலை மீட்கப்பட்டுள்ளது. தொன்மையான தங்க புத்தர் சிலையை விற்பனை செய்யும் நோக்கில் வைத்திருந்த மூன்று சந்தேகநபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 21, 41 மற்றும் 51 வயதான குறித்த சந்தேகநபர்கள் ஹட்டன், தெஹிவளை மற்றும் கொட்டகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபர்களை இன்று முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.