Serum Institute நிறுவனத்தில் தீ விபத்து

இந்தியாவில் Covishield தடுப்பூசி தயாரிக்கும் Serum Institute நிறுவனத்தில் தீ விபத்து

by Bella Dalima 21-01-2021 | 7:26 PM
Colombo (News 1st) இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான, புனேவில் உள்ள Serum Institute நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டு தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக புனே மேயர் முரளிதர் மோஹுல் தெரிவித்துள்ளார். இங்குதான் கொரோனா தொற்றுக்கு எதிரான COVISHIELD தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள கட்டடத்தில் தற்போது தடுப்பூசி தயாரிப்புப் பணிகள் தொடங்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இத்தீவிபத்து அந்நிறுவனத்தின் புதிதாகக் கட்டப்பட்ட நிர்வாகக் கட்டடத்தில் தான் ஏற்பட்டுள்ளது. வெல்டிங் செய்யும் போது வெளியாகும் தீப்பொறியால் இந்த தீ விபத்து நிகழ்ந்ததாகவும், இதில் 4 ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாகவும் மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டாபே தெரிவித்துள்ளார். கட்டடத்தின் கடைசித்தளம் முற்றிலும் தீக்கிரையாகி விட்டதாகவும், அங்கிருந்த 5 பேர் தான் உயிரிழந்துள்ளதாகவும் புனே மேயர் முரளிதர் மோஹுல் குறிப்பிட்டுள்ளார் தீ விபத்து தொடர்பாக Serum Institute உரிமையாளர் ஆதர் பூனாவாலா முதலில் செய்த ட்வீட்டில் "இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் கட்டடத்தின் சில தளங்கள் மட்டும் சேதமாகியுள்ளன" என்றும் குறிப்பிட்டிருந்தார்.   ஆனால், அதைத் தொடர்ந்து துரதிர்ஷ்டவசமாக சில உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும், அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாகவும் பூனாவாலா தெரிவித்துள்ளார்.   மேலும், COVISHIELD தடுப்பூசிகள் பல கட்டடங்களில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு எந்த சேதமும் இருக்காது என்று அனைத்து அரசாங்கங்கள் மற்றும் பொதுமக்களுக்கு உறுதி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.