டொனால்ட் ட்ரம்ப்பின் பிரியாவிடை பேச்சு

தமக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்ததாக ட்ரம்ப் தெரிவிப்பு

by Staff Writer 20-01-2021 | 8:38 AM
Colombo (News 1st) தாம் எதைச் செய்வதற்காக தெரிவுசெய்யப்பட்டாரோ அதனை செவ்வனே செய்து முடித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். YouTube காணொளியொன்றில், ஜனாதிபதி ட்ரம்ப் தமது பிரியாவிடை உரையை பதிவேற்றியுள்ளார். மிகப்பெரும் சவால்கள், மிகவும் கடினமான போராட்டங்களை தாம் பொறுப்பெடுத்து செயற்பட்டதாகவும் அதற்காகவே மக்கள் தம்மை தெரிவு செய்ததாகவும் அவர் கூறினார். கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை ஜனாதிபதி ட்ரம்ப் இன்னமும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவோ, தோல்வியை ஒப்புக்கொள்ளவோ இல்லை. ஜனாதிபதி ட்ரம்பின் பதவிக் காலத்தின் இறுதி இரண்டு வாரங்களிலும், Capitol Hill வன்செயல்களினால் ஏற்பட்ட பின்னடைவு ஆதிக்கம் செலுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி ட்ரம்பின் ஆதரவாளர்கள், காங்கிரஸை முற்றுகையிட்டு தேர்தல் முடிவுகளை மாற்றியமைப்பதற்கு முயற்சி மேற்கொண்டிருந்தனர். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக இன்று (20) பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.