எந்த சக்தியாலும் என்னை மௌனிக்கச் செய்ய முடியாது

எந்த சக்தியாலும் தன்னை மௌனிக்கச் செய்ய முடியாது என கொழும்பு பேராயர் தெரிவிப்பு

by Bella Dalima 20-01-2021 | 7:24 PM
Colombo (News 1st) கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்துகொண்டு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கருத்து வெளியிட்டார். சரியானதையும் பிழையானதையும் செய்வதற்கு எந்த கட்சியை சேர்ந்தவர் என்பதோ, எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதோ, எந்த இனத்தை சேர்ந்தவர் என்பதோ முக்கியமல்ல. சரியானதை செய்வதே அவசியம். மனசாட்சி படிப்படியாக மரணிப்பதே இங்கு இடம்பெறுகின்றது என இதன்போது கொழும்பு பேராயர் கூறினார். உண்மையை பொய்யென மாற்றுவதற்கு செயற்படுகிறார்கள். எனினும், சத்தமிடுவதால் உண்மை பொய்யாகிவிடாது என பேராயர் வலியுறுத்திக் கூறினார். கிறிஸ்தவ தலைமைத்துவம் என்பது அச்சமின்றி தைரியமாகப் பேசுவது என சுட்டிக்காட்டிய பேராயர், தாம் மரணத்திற்கு அஞ்சாமல் குரல் கொடுத்து வருவதாகவும் எந்த சக்தியாலும் தன்னை மௌனிக்கச் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டார். நாட்டின் வளங்கள் வீணடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என கூறிய கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, மக்களின் மனிதாபிமான முன்னேற்றத்தை பாதுகாப்பதற்காக குரல் கொடுக்க வேண்டியது தலைமைத்துவத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் என கூறினார்.