அரசாங்கத்தின் வர்த்தமானிகளால் நிவாரணம் கிடைத்ததா?

அரசாங்கத்தின் வர்த்தமானிகளால் மக்களுக்கு நிவாரணம் கிடைத்ததா: பாராளுமன்றில் வாதப் பிரதிவாதம்

by Staff Writer 20-01-2021 | 8:33 PM
Colombo (News 1st) அரசாங்கம் அண்மைக்காலமாக விடுத்த வர்த்தமானிகள் மூலம் மக்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளதா என்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று விவாதம் இடம்பெற்றது. சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க, சிகரெட் விலை அதிகரிக்கும் என்ற அடிப்படையில் அரச வங்கி ஊடாக கடன் பெற்றுக்கொள்ளப்பட்டதன் மூலம் ஏற்பட்ட நட்டம் குறித்து சுட்டிக்காட்டினார். நேற்றைய தினத்திலும் அவர் இது தொடர்பாக கருத்து வௌியிட்டதுடன், அந்த குற்றச்சாட்டுகளை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார நிராகரித்தார். தாம் கட்டுவன வங்கிக் கிளையுடன் தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவியதாகவும் சாதாரண வர்த்தகர் ஒருவருக்கே கடன் வழங்கப்பட்டுள்ளதாக பதிலளிக்கப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்தார். எனினும், தாம் உண்மையையே கூறியுள்ளதாகவும் அது தொடர்பில் தீர விசாரித்து பதிலளிக்குமாறும் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
தேங்காய் எண்ணெய்க்கு வரி விதித்து அது 14 நாட்களில் பிரதமரினால் மாற்றப்பட்டுள்ளது. வத்தகப் பொருள் ஒன்றுக்கு வரி விதித்து 30 நாட்கள் செல்லும் வரை வரித் திருத்தம் மேற்கொள்ள முடியாது. எனவே, இதனை எவ்வாறு மாற்றினீர்கள்? அது சட்டத்திற்கு முரணானது. அதனை பாராளுமன்றத்திற்கு கூற வேண்டும். மீண்டும் டிசம்பர் 15 ஆம் திகதி நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் சுற்றுநிரூபம் ஒன்றை வௌியிட்டார். அந்த இரண்டு திருத்தங்களையும் மாற்றி, 125 ஆக மாற்றுவதாக குறிப்பிட்டுள்ளார். ஏனைய தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கு வரி 125 ரூபாவாகும் போது, வில்மாவிற்கு மாத்திரம் டிசம்பர் 14 ஆம் திகதி 100 ரூபாவிற்கு வரி விடுவிப்பு வழங்கப்படுகிறது. அதன் மூலம் 175 மில்லியன் ரூபா அதீத இலாபத்தை டிசம்பர் 17 ஆம் திகதி பெற்றுக் கொண்டுள்ளனர். மணல் போக்குவரத்து தொடர்பிலும் அவ்வாறு தான். அவ்வேளையில் சுற்றாடல் அமைச்சராக இருந்த S.M.சந்திரசேன இன்று முதல் மணல் கொண்டு செல்வதற்கு அனுமதிப்பத்திரம் அவசியம் என கௌரவ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சட்டமொன்றில் வழங்கப்பட்ட அதிகாரத்தை எவ்வாறு ஜனாதிபதியினால் மீற முடியும்? அதற்கு எங்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது? அவர் பதுளைக்கு சென்று தனது வார்த்தை சுற்றுநிரூபம் என்று கூறினார். அது கற்காலத்திற்கு சொந்தமானது.
இதேவேளை, பொருட்களின் விலையை குறைப்பதற்காக வர்த்தமானிகளை வௌியிட்டாலும், குறைக்கப்பட்ட விலைகளை எங்கும் காண முடிவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டார். ஓரிரு வர்த்தமானிகளில் குறைபாடுகள் இருக்கலாம், எனினும் திருடுவதற்காக தம்மை கோட்டாபய ராஜபக்ஸ தெரிவு செய்யவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். சீனி கொள்வனவில் மோசடி இடம்பெற்றுள்ளதாகக் கூறுபவர்கள் அது தொடர்பான தகவல்களை வழங்கினால், குற்றப்புலனாய்வு விசாரணைக்கு அதனை கொண்டு செல்வதாக மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.