வலம்புரி சங்கை விற்க முயன்ற 06 பேர் கைது

by Staff Writer 19-01-2021 | 8:50 AM
Colombo (News 1st) 20 மில்லியன் ரூபாவிற்கு வலம்புரி சங்கு ஒன்றை விற்பனை செய்ய முயற்சித்த 06 பேர் அம்பலன்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, உளவாளி ஒருவர் அனுப்பப்பட்டு சந்தேகநபர்களை கைது செய்ய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.​   சந்தேகநபர்கள் பயணித்த அதி சொகுசு வாகனமொன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தொலைபேசியூடாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு வலம்புரி சங்கை விற்பனை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் ஹம்பாந்தோட்டை கடற்றொழில் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.