கொழும்பு மாவட்டத்தில் 197 கொரோனா நோயாளர்கள் பதிவு

நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 197 கொரோனா நோயாளர்கள் பதிவு

by Chandrasekaram Chandravadani 19-01-2021 | 10:46 AM
Colombo (News 1st) இன்று (19) காலை வரையான 24 மணி நேர காலப் பகுதிக்குள் நாட்டில் புதிதாக 674 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COIVD - 19 தொற்றை கட்டுப்படுத்தும் செயலணி தெரிவித்துள்ளது. குறித்த நோயாளர்களுள் 47 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர். உள்நாட்டில் அடையாளம் காணப்பட்ட ஏனைய நோயாளர்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானோர் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 197 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 165 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 09 பேரும் வவுனியா மாவட்டத்தில் நால்வரும் திருகோணமலை மாவட்டத்தில் 07 பேரும் மன்னார் மாவட்டத்தில் இருவரும் யாழ். மாவட்டத்தில் ஒருவரும் புத்தளம் மாவட்டத்தில் இருவரும் கேகாலை மாவட்டத்தில் ஒருவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 நபர்களும் கண்டி மாவட்டத்தில் 22 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு - கோட்டை பகுதியில் 10 பேர், கொம்பனித்தெரு பகுதியில் 08 பேர், கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் 07 நபர்கள், பம்பலப்பிட்டி பகுதியில் இருவர், நாரஹேன்பிட்ட பிரதேசத்தில் 29 பேர், வௌ்ளவத்தை பிரதேசத்தில் 11 நபர்கள், பொரளை பகுதியில் மூவர், கிரேண்ட்பாஸ் பகுதியில் நால்வர், மட்டக்குளி பிரதேசத்தில் இருவர் அடங்கலாக கொழும்பு மாவட்டத்தில் 197 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு பகுதியில் 49 பேரும் வத்தளை பிரசேத்தில் 17 பேரும் புதிதாக தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பகுதியில் ஒருவருக்கும் கல்முனை பகுதியில் 08 பேருக்கும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்னார் - முருங்கனில் இருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். திருகோணமலை பிரதேசத்தில் இருவர் மற்றும் உப்புவௌி பகுதியில் ஐவர் அடங்கலாக திருகோணமலை மாவட்டத்தில் 07 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தின் இளவாலை பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஒரு கொரோனா நோயாளர் இனங்காணப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பகுதியில் நால்வரும் காத்தான்குடி பிரதேசத்தில் 07 பேரும் அடங்கலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இன்று காலை வரையில் நாட்டில் மொத்தமாக 53,750 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள அதேநேரம், 45,820 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் நேற்றைய தினம் (18) மேலும் 06 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டன. களுத்துறை வடக்கு, கொழும்பு - 15, முகத்துவாரம், கொழும்பு - 03, தெஹிவளை மற்றும் இரத்தினபுரி ஆகிய இடங்களை சேர்ந்த 06 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தநிலையில், கொரோனா தொற்று காரணமாக வௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 94 பேர் இன்று (19) காலை தாயகம் திரும்பியுள்ளனர். சவுதி அரேபியா, கட்டார் மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்தே குறித்த 94 பேரும் நாடு திரும்பியுள்ளனர். நாட்டில் முன்னெடுத்து வரப்படும் 92 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 8,198 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்றைய தினத்தில் (18) மாத்திரம் 14,984 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.