அஜித் பிரசன்ன பிணையில் விடுவிப்பு

ஓய்வுபெற்ற மேஜர் சட்டத்தரணி அஜித் பிரசன்ன பிணையில் விடுவிப்பு

by Staff Writer 19-01-2021 | 3:42 PM
Colombo (News 1st) ஒரு வருடத்திற்கும் அதிகக் காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற மேஜர் சட்டத்தரணி அஜித் பிரசன்னவை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவித்து கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய இன்று உத்தரவிட்டார். மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 13 ஆம் திகதி விதித்த உத்தரவை நடைமுறைப்படுத்தி சந்தேகநபரை பிணையில் விடுவித்த மேலதிக நீதவான், வழக்கை எதிர்வரும் 19 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழங்கிய வாக்குறுதிக்கமைய, நீதிமன்றத்தில் இடம்பெறும் எந்த வழக்கு நடவடிக்கையையும் ஊடகங்களுக்கு அறிவிக்கக் கூடாதென மேலதிக நீதவான் சந்தேகநபருக்கு உத்தரவிட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊடக சந்திப்பொன்றை நடத்தி, 11 இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கின் சாட்சியாளர்களை அச்சுறுத்தும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில் கொழும்பு மேலதிக நீதவானால் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.