இலங்கை கடற்பரப்பில் மூழ்கிய இந்திய படகு

இலங்கை கடற்பரப்பில் மூழ்கிய இந்திய படகை கடற்படை தேடி வருகிறது

by Staff Writer 19-01-2021 | 7:28 PM
Colombo (News 1st) சர்வதேச கடல் எல்லையை மீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய படகொன்று சமநிலையை இழந்து குடைசாய்ந்ததால் நீரில் மூழ்கி விபத்திற்குள்ளாகியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நெடுந்தீவில் இருந்து வடமேல் திசையில் சர்வதேச கடற்பரப்பில் இருந்து 8 கடல் மைல் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த படகு கடற்படையின் படகை மீறிச் செல்ல முயன்ற நிலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த இந்திய மீன்பிடிப் படகில் வருகை தந்த மீனவர்களைத் தேடும் நடவடிக்கை நேற்றிரவு முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடற்படையின் சுழியோடிகளுடனான கப்பலும் படகொன்றும் குறித்த கடற்பரப்பில் தேடுதலில் ஈடுபட்டுள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது. விபத்திற்குள்ளான இந்திய படகு தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகளுக்கு அறிவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.