யாழ். மண்டைதீவு காணி அளவீடு மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது

by Staff Writer 18-01-2021 | 8:02 PM
Colombo (News 1st) யாழ். மண்டைதீவில் முன்னெடுக்கப்படவிருந்த காணி அளவீட்டு நடவடிக்கை, மக்களின் எதிர்ப்பினால் இன்று (18) கைவிடப்பட்டது. மண்டைதீவு ஜே107 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 29 பேரின் 18 ஏக்கர் பரப்பளவு காணி சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தினரால் அளவீடு செய்யப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நில அளவை திணைக்களத்தினர் அங்கு சென்றிருந்தனர். நில அளவைத் திணைக்கள அதிகாரிகளுக்கு பொதுமக்களும் அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களின் எதிர்ப்பை அடுத்து, நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து வௌியேறினர். இதனையடுத்து பொதுமக்களும் அரசியல்வாதிகளும் அங்கிருந்து வௌியேறுவதற்கு தயாரானபோது நில அளவைத் திணைக்களத்தினர் பொலிஸாருடன் வருகை தந்ததாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார். இதன்போது எதிர்ப்பு தெரிவித்து வீதி மறியல் போராட்டம் நடத்தப்பட்டதை அடுத்து காணி அளவீடு செய்யும் நடவடிக்கை இன்று கைவிடப்பட்டுள்ளது.